வைகை நதி நாகரிகம்.
மதுரையின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களால் 2017-ம் ஆண்டில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்களும், சிறிது புனைவும் கொண்ட ஒரு புத்தகம்.
மேற்குமலைத்தொடர்ச்சிகளால் தேனி அருகே உருவாகும் வைகை ஆறு, பல சிறு ஆறுகளை இணைத்துக்கொண்டு திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அழகன்குளம் வழியாக கடலில் கலக்கிறது.
வருடத்தில் நான்கு மாதங்களுக்கு மட்டுமே நீர்ப்போக்கை கொண்டுள்ள சங்ககால பாடல்களில் வையை என்றழைக்கப்பட்ட வைகை ஆற்றங்கரையில் 2400 ஆண்டுக்களுக்கு முன்னரே ஒரு நாகரிக சமூகம் வாழ்ந்துள்ளனர் என்பதை உங்களால் யோசித்துப்பார்க்க முடிகிறதா?
கீழடி ஒரு தொடக்கப்புள்ளி. வைகை நதிக்கரையில் 293 இடங்களில் இதுபோன்ற தொல்லியல் செய்வதற்கான இடங்கள் என்று கண்டறியப்பட்டு, அதில் கீழடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 19 பகுதிகளில், 13 பகுதிகள் வைகை நதி நாகரித்தின் சிறப்பை பேசுகிறது.
இத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே அந்த நாகரிகத்தில், “கோதை” என்ற ஒரு பெண்ணின் பெயர் தமிழ் எழுத்துகளால் தங்கக்கட்டுகளால் பொறிக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
2000 ஆண்டுகளுக்கு முன்னர் அழகுன்குளம் கடற்கரையில், யாரோ ஒருவர் பானை ஓட்டின் மீது வரைந்த ரோமானிய கப்பல் ஓவியக்கிறுக்கல் இப்பொழுது கிடைத்துள்ளது என்ற ஒரு செய்தி வியப்பல்லவா?
தமிழ்மொழியில் காலத்தால் மிகப்பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் 33 இடங்களில் கிடைத்துள்ளன. இதில் 22 கல்வெட்டுகள் மதுரைப்பகுதிகளில் கிடைத்துள்ளன.
இந்தப்புத்தகத்தை படித்துக்கொண்டே மதுரையையும், வைகையையும், கீழடியையும் நேரில் சென்று பார்க்க நேர்ந்தது. முற்றிலும் ஒரு மாறுப்பட்ட கோணத்தில் பார்க்க நேர்ந்தது.
நான் மதுரையில் நடந்த தெருக்களினூடே ஒரு பொற்கொல்லன் அரண்மனையை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறான், வெண்ணிற முத்துமாலையை அணிந்துள்ள ஒரு பெண், ஆப்கானிஸ்தானின் சூது பவள மாலையை அணிந்துள்ள பெண்ணோடு, தொருவோர வீட்டில், யானைத் தந்தத்தால் ஆன தாயக்கட்டடைகளை உருட்டிக்கொண்டுள்ளனர், ரோமானிய வணிகன் ஒருவன், பாண்டிய வணிகனோடு இருவருக்கும் தெரிந்துள்ள ரோமானிய மொழியில் பாப்பரஸ் தாளில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளனர் என்று எண்ணும் போதே பிரம்மிப்பு உருவாகிறது அல்லவா? அதைத்தான சு.வெங்கடேசனும் தன் எழுத்துகளால் கடத்துகிறார்.
மீதியுள்ள 6 பகுதிகளில், தொடக்கக்காலங்களில் கீழடி புறக்கணிக்கப்பட்ட ஆதங்கங்களும், கீழடி ஒட்டி கள அருங்காட்சியம் அமைக்க அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தியதையும் பதிவு செய்கிறார். இன்று அவரது கனவு, அனைத்து தமிழர்களின் கனவு மெய்படுவது போல், கீழடியில் கள அருங்காட்சியம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டே இடத்தில் மட்டுமே கள அருங்காட்சியம் அமைந்துள்ளது. ஒன்று சென்னை கோட்டைக்குள் உள்ளது, இரண்டாவது 2023-ல் கீழடியில் தொடங்கப்பட்டுள்ளது.
பழந்தமிழரின் ஒரு தொன்மை எச்சம் நம் கண்முன்னே நினைவாய் விரிகிறது. புதியதாய் வாங்குங்கள், இரவல் வாங்குங்கள். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். அதன்பிறகு மதுரையை, பாண்டிய நாட்டை வலம் வாருங்கள்.
