Monday, January 21, 2019

கரன்சி காலனி - புத்தக விமர்சனம்

என்ன டா இவன், சனிக்கிழமை தான் ஒரு புத்தகம் படிச்சிட்டேன் ன்னு போட்டான். அதுக்குள்ள திங்கட்கிழமை மறுபடியும் இன்னொரு புத்தகம் படிச்சிட்டேன் ன்னு போடுறான். உண்மைய சொல்றானா, இல்ல அவ்ளோ வெட்டியா இருக்கானா ன்னு உங்களுக்கு பல கேள்விகள் வர்றது எனக்கும் தெரியுது. அது ஒன்னுமில்லைங்க. போன தடவை விமர்சனம் எழுதும் போது சொன்னேன்ல. புத்தகம் மூன்று வகை படும் ன்னு. ஜில் ஜங் ஜக் ன்னு. ஓ, நீங்க இன்னும் அத படிக்கலையா? படிச்சிருங்க இந்தாங்க (நிறக்குருடு - புத்தக விமர்சனம்). அதுல முதல் வகை தான் இந்த புத்தகம். மறுபடியும் மொக்கைய போட ஆரம்பிச்சுட்டான் நினைக்கும் நல்ல உள்ளங்களுக்காக விமர்சனத்துக்கு போயிரலாம்.

கரன்சி காலனி



























ஆசிரியர்: 'அந்திமழை' ந.இளங்கோவன்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ்
விலை: 70 ரூபாய்
பக்கங்கள்: 88

புத்தகம் அறிமுகமானது எப்படி:
நாங்க நாலு பேரு, எங்களுக்கு பயமே கிடையாது ன்னு காக்க காக்க-ல சொல்ற மாதிரி. நாங்களும் நாலு பேரு(ஹரிராமன்,லட்சுமி நாராயணன், சபீர் ஜாவித்,நானு), எங்களுக்கு பயம் லாம் இருக்கு, என்ன கொஞ்சம் புத்தகம் அதிகமா படிப்போம். ஒவ்வொரு வருடமும் நாங்கள் நால்வரும் வாங்கும் புத்தகங்களை படித்து முடித்தவுடன் அடுத்தவங்களுக்கு படிக்கச் கொடுத்துருவோம். அப்படி, ஹரிராமன் கிட்ட வாங்கி வந்தது தான் இந்த புத்தகம் கரன்சி காலனி.

விமர்சனம்:
கரன்சி காலனி ன்னு பேர் பார்த்த போது, ஏதோ பொருளாதாரம் சம்மந்தம் பட்ட புத்தகமா தான் இருக்கும் ன்னு நினைச்சுட்டே படிக்க ஆரம்பித்தேன். பின்னாடி தான் தெரிஞ்சுது. புத்தகம் பொருளாதாரம் பேசுல. அந்த பொருளாதாரத்தை ஆட்டி படைத்த சில சிறிய/பெரிய நிறுவனங்களை ஆரம்பித்த சில அற்புத மனிதர்களை பற்றிய புத்தகம் ன்னு. எப்போதுமே, நம் மனசு வெற்றி கதைகளை கேட்கும் போதும் சரி, படிக்கும் போதும் சரி, அதை வெகு வேகமாய் இயல்பாய் ரசிக்க ஆரம்பித்துவிடும். அப்படி பட்ட வெற்றி கதைகளை கொண்ட புத்தகம் தான் இது. இயல்பாய் நானும் வியாபாரம் பற்றிய செய்திகளில் அதிகம் ஆர்வம் காட்டுவேன். அதற்கு காரணம், இந்த நாசமாய் போன IT வேலையை விட்டுவிட்டு, சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற என்னுடைய பல நூற்றாண்டு கனவு தான். கனவு மட்டும் தான். இதுவரைக்கும் ஒன்னும் புடுங்கவில்லை என்பதே உண்மை. சரி அத விடுங்க, புத்தகத்திற்கு போவோம்.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் ஆசை இருக்கும். இந்த தொழில் பண்ணனும். அதுல புரட்சி பண்ணனும். அந்த தொழில்ல முதல் இடத்துக்கு வரணும் ன்னு நெறய ஆசை இருக்கும். இப்படி ஆசை மட்டுமே பட்டுட்டு இருக்காமல், அந்த ஆசையை தன்னுடைய உழைப்பாலும், சாமர்த்தியத்தாலும், நிர்வகிக்கும் திறனாலும் வென்று எடுத்த பதினைந்து முதலாளிகளின் கதை. முதலாளி ன்னு சொன்ன உடனே, உழைப்பாளிகளின் உழைப்பால் உயர்ந்த முதலாளிகள் ன்னு நினைச்சுற போறீங்க. கஷ்ட பட்டு, துயர பட்டு, உழைப்பாளிகளோடு வாழ்ந்து முன்னுக்கு வந்த முதலாளிகளின் கதை. பதினைந்து கதை தான். ஒன்னு ஒன்னும் 5 இல்ல 6 பக்கங்கள் தான். படிக்க ரொம்ப சுவாரசியமான கதைகள் ஒவ்வொண்ணும். நியூஸ் 18 தொடங்குவதற்கு காரணமான கதை, உலகத்தில் அதிகமாய் விற்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் அப்பளத்தை உருவாக்கிய படிப்பறிவில்லா, பணபலம் இல்லாத 7 பெண்களின் கதை, ஏர்டெல் உருவான கதை, மைண்ட் ட்ரீ உருவான கதை, MRF உருவான கதை ன்னு வெற்றி கதைகள் மட்டுமில்லாமல், வெற்றி பாதையிலிருந்து 85 வங்கிகளிடமிருந்து 2700 கோடி கடன் வாங்கி, அதை கட்ட வழி இல்லாமல், திவாலாகும் நிலைமைக்கு போய், விஜய் மல்லையா மாதிரி ஓடி ஒளிந்து கொள்ளாமல், மீண்டும் போராடி தவறுகளை சரி செய்து, மறுபடியும் வெற்றி பாதையில் வந்த அரவிந்த் மில் ஜெயித்த கதையும் கூறுகிறது.  பூஜ்யமிலிருந்து 100 க்கும், 100 லிருந்து மறுபடியும் பூஜ்யம் வரை சென்று மறுபடியும் 100 க்கு வந்த கதைகள் ன்னு புத்தகம் முழுவதும் அப்டியே உத்வேக கதைகள் தான்.

இந்த புத்தகத்தை படிச்சுட்டு, முழு உத்வேகத்தோட இருக்கேன். நாளைக்கே தொழில் தொடங்குறேன். 2020-ல பிரபு விமான நிலையம், ரயில் நிலையம், சட்டசபை, பாராளுமன்றம் ன்னு ஆரம்பிக்கிறேன். ஒரு சூறாவளி புறப்பட்டதே!


அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.

அன்புடன்
-பிரபு கந்தசாமி

Saturday, January 19, 2019

நிறக்குருடு - புத்தக விமர்சனம்

2019 முதல் நாம் படித்த புத்தகத்திற்கு விமர்சனம் போடலாம் என்று ஒரு உத்தேசம். இவன் என்ன பெரிய இவனா, புத்தகத்திற்கு விமர்சனம் போட என்று இதை படிக்கும்போது உங்களுக்கு தோன்றலாம். எனக்கும் அதே இஷ்க் இஷ்க் என்று தான் தோனியது. ஒன்றுமில்லை, இந்த விமர்சனம் படித்து விட்டு, என் வாசிப்பு நடையுடன் ஒத்துப்போகும் சில அறிய நண்பர்களை அறிந்து, அவர்களின் பரிந்துரைகளை வைத்து வாசிப்பு பழக்கத்தை மேலும் தொடர ஒரு அவா. அப்புறம் வலைப்பதிவு எழுதும் என் கடந்தகால பொழுதுபோக்கையும் புதுப்பிக்கவும் ஒரு ஆசை. கடைசியா 2013ல எழுதுனதுங்க. :( அவ்வளவு தாங்க!

நிறக்குருடு


























ஆசிரியர்: க.சுதாகர்
பதிப்பகம்: வம்சி
விலை: 100

புத்தகம் அறிமுகமானது எப்படி: 
இந்த எழுத்தாளர் சுதாகரின் முதல் நூல் 6174 செக்க போடு போட்டது. அருமையான அறிவியல் புனைகதை. இன்றும் எனக்கு பிடித்த நாவல்களுள் அதுவும் ஒன்று. அவரின் அடுத்த நாவலான 7.83 ஹெர்ட்ஸ்-ம் விறு விறு நடையுடன் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைக்கதையே. இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவன் என் நண்பன் சபீர் ஜாவித் தான். சரி, இவரின் எழுத்து நடை பிடித்துப்போனதால் இவரின் அடுத்த நூல்களை படிக்கும் ஆர்வமும் அதிகமானது. ஆனால், சபீர் அப்பவே சொன்னான். கொஞ்சம் இழுவை மாதிரி ன்னு பேசிக்கிட்டாங்க. பார்த்து எடு ன்னு. சரி எடுத்து தான் பாப்போம் ன்னு எடுத்தேன் 2019 புத்தக கண்காட்சியில். வாங்க, புத்தக விமர்சனத்திற்கு போவோம்.

விமர்சனம்:
ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஒலி இருக்கும்.
1). சில புத்தகங்கள், "டேய், விட்டுறாத டா தம்பி" ன்னு தனுஷ் குரலில் சொல்லி சொல்லி, ஒரே மூச்சில் நம்மை படிக்க வைத்து விட்டு விடும்.
2). சில
புத்தகங்கள், "பாஸ், ஒன்னும் பிரச்சனை இல்ல, கொஞ்சம் வெச்சு வெச்சு செஞ்சாலும், வீட்டுக்கு மட்டும் அனுப்பிருங்க பாஸ்" ன்னு வடிவேல் குரலில் சொல்லி, தினமும் படிக்க வைத்து முடித்து வைத்துரும்.
3). கடைசியா சில புத்தகங்கள் இருக்கு, தொறந்தாலே காஞ்சனா படத்துல இருட்டுல யாரோ அழுகிற மாதிரி கேக்கும்ல, அதே மாதிரி. "வாயேன் டா, வந்து படி டா" ன்னு அழுதுட்டே கூப்டுற மாதிரி இருக்கும், படிக்கவும் கொஞ்சம் சலிப்பாக இருக்கும். இந்த நிறக்குருடு அதுல மூணாவது வகைங்க.

அந்த அற்புத அறிவியல் புனைகதைகளை எழுதிய ஆசிரியரின் புத்தகமா இது ன்னு யோசிக்க வைத்த ஒரு புத்தகம். சரி டா, அப்படி என்ன தான் புத்தகத்துல இருக்கு ன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்காமல் இல்லை மக்களே.

நாம பள்ளி படிக்கும் போது(நாம ன்னா 90's கிட்ஸ் ங்க), தமிழ் படத்துல நற்றிணை, குறுந்தொகை ன்னு சில சங்க கால பாடல்களும், அதுக்கு விளக்கமும் கொடுத்து இருப்பாங்க. இந்த தலைவன் தலைவியை காணாது ன்னு சொல்வாங்கல. அதே தாங்க. அதோட பெரிய விரிவாக்கம் தாங்க இந்த நிறக்குருடு.

ஆசிரியர், தான் சந்தித்த இந்த உலக மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கை கதைகளையும், சங்க கால இலக்கியங்களோடு தொடர்புபடுத்தி பேசுகிறார். எனக்கு எப்பவும் இந்த சங்க இலக்கியங்கள் படிப்பவர்களை கண்டாலே வியப்பாக இருக்கும். அதை அவர்கள் பொறுமையாக படிக்கும் விதமும், அதை தொடர்பு படுத்திக்கொள்ளும் விதமும் ஆச்சிரியம் தரும். அதே ஆச்சிரியம் தான் இந்த புத்தகம் படிக்கும் போதும். ஒவ்வொரு பாடலுக்கும், ஆசிரியர் அதை நிகழ்கால நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தும் விதமும் அருமையோ அருமை. ஆசிரியர் ஒரு கதையில் சொல்லி இருப்பார். நம் வாழ்வின் ஒவ்வொரு  நிகழ்வுக்கும், ஒவ்வொரு சங்ககால பாடல் இருக்கிறது. அதை அவர் கோடிட்டும் காட்டி இருப்பார் ஒவ்வொரு கதையிலும். ஆனால், புத்தகம் முழுவதும் ஒரு மெல்லிய சோக இழைய ஊஞ்சலாடியது. எல்லா கதைகளும், ஒரு சோக நிகழ்கால முடிவோடு, சங்ககால பாடலோடு தொடர்பு படுத்தப்பட்டிருந்து. ஆனால், புத்தகம் உங்களுக்கு படித்து முடித்தவுடன் எந்த ஒரு தாக்கத்தையும் தராது.

உங்களுக்கு எந்த புத்தகமும் படிக்க இல்லாமல், இந்த ஒரு புத்தகம் தான் படிக்க இருக்கிறதென்றால்,  இந்த புத்தகத்தை எடுப்பதில் தவறேதுமில்லை. கொஞ்சம் பொறுமையாக,இல்ல ரொம்ப பொறுமையாக கையாள வேண்டிய புத்தகம் இது.

அட, என்னடா இது நிறக்குருடு ன்னு கேக்குறீங்களா, நிறங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை அறிய இயலாது போல், மனிதர்களும் சில வேறுபாடுகளை அறிய இயலாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பது தான் புத்தகம் உணர்த்தும் சேதி.

அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.

அன்புடன்
-பிரபு கந்தசாமி