Saturday, December 14, 2013

கற்றுமறவா காதல்


கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று காலை 6 மணிக்கு ஒலித்த கடிகாரத்தின் மண்டையில் தட்டிவிட்டு மெல்ல எழுந்தேன்..!!!

இரு கைகளையும் முன்புறமாக நீட்டி..,  சுவரைத் தடவி தடவியே.., அறையின் அடுத்த மூலையில் இருந்த அந்த டேபிளை அடைந்தேன் . டேபிளின் மீதிருந்த பெட்டியைத் திறந்து.., உள்ளே கைவிட்டு மூக்கு கண்ணாடியைத் தேடி அணிந்து கொண்டேன் . அப்புறம் கண்களை மெல்ல திறந்து பெட்டியின் உட்புறமாக ஒட்டப்பட்டிருந்த விநாயகரின் படத்தில் கண் விழித்தேன்..!!!

ஒரு வருடமாக இந்த நாளுக்காக காத்திருந்த நாட்களை மெல்ல அசைப்போட்டேன்.. இந்த நாள் தரப்போகும் இன்பத்தை நினைத்து உடனடியாக சுறுசுறுப்பானேன் ., டேபிளுக்கு அடியில் இருந்த பக்கெட்டை வெளியே இழுத்தேன். ப்ரஷ் எடுத்து வாயில் வைத்துக்கொண்டு.., சோப்பு டப்பாவும், டவலும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினேன்

குளித்து முடித்து வந்து மணியைப் பார்த்தேன்.. ஏழை காட்டியது... வேக வேகமாக சட்டையை அணிந்துக் கொண்டு இருந்தேன்...

"என்னடா வசந்த்.., கெளம்பிட்டியா..?" என்று தூக்கத்திலிருந்து எழுந்த முத்து கேட்டான்..

"ம்ம்.. ஆமாம்..!! நீ எங்கும் வெளிய போகலையா முத்து ..?"

"போ போ.. நானும் நீ போற இடத்துக்கு தான் வரணும்.. நான் கொஞ்சம் நேரம் கழித்து வரேன்.."

பேண்டை அணியும் போது ஏதோ ஒன்று பாக்கெட்டில் தட்டுப்பட என்னவென்று அறிந்து கொள்ளபேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுப் பார்த்தேன்..!! பாக்கெட் கத்தி..!!

"டேய்.., என்ன டா இது..,"

"பார்த்தா தெரில.., அது கத்தி.."

"அது தெரியுது.. எத்தன தடவ சொல்லி இருக்கேன்.. நீ என்ன வேணும்னாலும் பண்ணு.., யாரை வேணும்னாலும் கொலை பண்ணு.. ஆனா அப்படி போகும்போது என் பேண்ட்ட போடாதன்னு சொல்லி இருக்கேன்ல.."

"விட்றா.. நேத்து ஏதோ அவசரத்துல தெரியாம போட்டுட்டு போயிட்டேன்.. அதுக்கு என்ன இப்போ..? “

"சரி.. போட்டதுதான் போட்டுட்டு போன.. இதெல்லாம் எதுக்கு பாக்கெட்ல வச்சிக்கிட்டே சுத்துற.."

"நம்ம டார்கெட் எப்போ வேணும்னாலும் வெளிய வரும் மச்சி..!!!  நாமதான் அதை கபால்ன்னு புடிச்சுக்கணும்.. புரியுதா..??”

"காலையிலேயே வெறுப்பேத்தாதடா..!!"

"யப்பா.., சாமி.., இனி வைக்க மாட்டேன் டா.. தயவுசெய்து இப்ப போடா.."

மணி 10- தாண்டி இருந்தது..!!!

எப்போதும் காதலர்கள் குழுமி இருக்கும் பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா.., இன்று நான்கு ஜோடி காதலர்களை மட்டும் உள்வாங்கிருந்தது...!! இங்கு தான் என் காதலி சுமித்ரா வருவாள் என்று அவளுக்காக காத்து இருக்கிறேன்..!!

சுமித்ராவை பார்த்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது..!!! கடைசியாக அவளை நான் வாங்கி கொடுத்த சிகப்பு கலர் சுடிதாரில் பார்த்தேன்..!!
நினைவுகள் பின்னோக்கி ஓடியது..!!

2012, இதே நாள்., மணி காலை 11..!!

பூங்கா முழுவதும் காதலர்களால் நிரம்பப்பட்டிருந்தது..!!! அனைவரும் இந்த உலகத்தை மறந்து வேறு உலகிற்குள் டிராவல் ஆகிக் கொண்டிருந்தனர்..!! நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்..!!

"டேய் வசந்த்.., டேய் .., என்ன டா நான் சொல்றத கேக்குறியா..?? இல்லையா..?? " என்று சுமித்ரா அதட்டினாள்..!!!

"ம்ம்ம்.. கேட்டுக்கிட்டு தான் இருக்கேன் சொல்லு டி.."  என்று அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்த நான் தலையை தூக்காமலே பதில் அளித்தேன்..!!!

"இப்ப என்ன டா பண்றது..?? டாடிக்கு நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சு போச்சு டா.. மூணு நாளா வீட்ட விட்டு வெளிய போகக்கூட விடல.. இப்ப கூட சசி வீட்டுக்கு போறேன்னு சொல்லி தான் உன்ன பார்க்க வந்து இருக்கேன்.."

“நீ கவலைப்படாத சுமி.., நான் தேவா கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.. அவன் எல்லா ஏற்பாடும் பண்ணிடுவான்..!!" நீ வெள்ளிக்கிழமை காலையில உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற வாட்டர் டேங் கிட்ட வந்து நில்லு.. நாங்க வந்து பிக்-அப் பண்ணிக்கிறோம்.."

“உன்ன நம்பி தான் டா இருக்கேன்..” என்று சொல்லிய சுமித்ராவின் முகம் சட்டென்று மாறியது..!!!

"வசந்த்.., ஒரு நிமிஷம் எழுந்துரு..!! அங்க வந்துட்டு இருக்கறவங்க டாடி ஆட்கள் மாறி இருக்கு.." என்று பதறிப்போய் எழுந்தாள்..

என்ன டா இது புது பிரச்சனை என்று நானும் தீவிரமானேன்..!!

பழைய நினைவுகளில் மூழ்கிப்போயிருந்த என்னை.., செல்போன் சிணுங்கி 2013க்கு கொண்டு வந்தது..!! முத்து காலிங்ன்னு இருக்கவே., அட்டெண்ட் பண்ணேன்..!!

"பொறம்போக்கு.., பன்னாட.., ******.."

அந்த சைடில் முத்து வெறிப்பிடித்தவன் போல திட்டிக்கொண்டு இருந்தான்..!!

“டேய்.., இரு டா.. ஏன் டா என்ன ஆச்சு.. ஏன் இப்படி கத்துற..!!” என்று அப்பாவியாக கேட்டேன்...

“டேய்.. நீ எவள வேணும்னாலும் பார்க்க போ... அதுக்கு ஏன் டா என்ன ரூமுக்குள்ள பூட்டி வச்சிட்டு போன..” என்று சொல்லும்போது தான் உணர்ந்தேன்.., சந்தோசத்தில் கதவைப் பூட்டி விட்டு வந்துவிட்டோம் என்று...!!

“சாரி.., சாரி டா.. இரு ஒரு மணி நேரத்துல்ல வந்துறேன்..” என்று சொன்னவனை இடைமறித்து..

“அதலாம் ஒன்னும் புடுங்க வேண்டாம்..!!! பூட்டை ஒடைச்சிட்டோம்.. வரும்போது புது பூட்டு வாங்கி வா.. திருட்டு பசங்க வேற அதிகமா இருக்காங்க இங்க..”  ன்னு சொன்னவனுக்குசரி டா” என்று சொல்லி கட் பண்ணினேன்..!!!

நேரம் ஆகிவிட்டதே என்று திரும்பி பார்த்தேன்.. என் சுமி அதே.., நான் வாங்கி கொடுத்த சிகப்பு கலர் சுடிதாரில் வந்து கொண்டு இருந்தாள்..!!

ஒரு வருடத்தில் இன்னும் அழகாக மாறி இருந்தாள்..!! என் மனது முழுவதும் எல்லையில்லா மகழ்ச்சியில் கூத்தாடியது..!!!

நேராக வந்தவள்., என்னை கடந்து சென்று நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னால் அமர்ந்திருந்த அதே பெஞ்சில் அமர்ந்தாள்..!!!

ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக பிரமை பிடித்தவள் போல் அமர்ந்து இருந்தவள்.., ஓவென அழ தொடங்கினாள்..!!

நான் பதறிப்போய் ஓடினேன்..!! ஏய் சுமி அழாதடி.., அழாதன்னு சொல்றன்ல.."  என்று ஓவர் டெசிபலில் அலறினேன்..!!

அவளுக்கு ஏதும் கேக்கவில்லை போலும்.. அழுவதைத் தொடர்ந்தாள்.. கண்ணீர் வழிந்தது.. தொடைக்க முயன்று தோற்றேன்..  என் உலகம் நின்று விடும் போல இருந்தது..

இதை பார்க்கவா இத்தனை நாள் காத்திருந்தோம்.., இதை பார்க்கவா ஓடோடி வந்தோம்..  பாவம் என்னை காதலித்த ஒரே பாவத்திற்காக இத்தனை துன்பமும் அனுபவிக்கிறாள்..!!! என்னை நானே வெறுத்தேன்..!!!
 
வெறுப்பில் மறுபடியும் 2012க்கு பயணமானது என் மனது..!!

சுமித்ரா மடியிலிருந்து பதறி போய் எழுந்த என்னை.., "டங்" என்று ஏதோ ஒன்று என் பின் மண்டையில் அடித்தது..!!! அம்மா என்று அலறியபடி விழுந்தேன்..!!! இன்னொருமுறை "டங்" என்று அடித்தது.. ஆனால் இப்பொழுது என் முகத்தில் அந்த அடி விழுந்தது..

மயக்க நிலைக்குச் சென்றாலும்., என் சுமியின் உருவமும்., குரலும் உணர்வில் வைத்தது என்னை..

“டேய்., வசந்தை விடுங்கடா.., அவன் பாவம் டா.. விடுங்க டா.. என்னையும் கொல்லுங்க டா..” என்று அவள் கதறிய போதே அவளை தரதர வென இழுத்து சென்றனர்..!! 

இவர்களை அடித்து.., சுமியை கைப்பிடிக்க வேண்டும் என்று மனது நினைத்தாலும்., உடல் சற்றும் உதவவில்லை..!! மறுபடியும் ஒருமுறை "டங்"..!! இம்முறை முழுதாக மூடினேன் கண்ணை..!!!

இன்று தான் எனக்கு நினைவுநாள்..!! நான் கொல்லப்பட்ட இடத்தை தான் இப்போழுது சுமி கண்ணீரால் நனைத்துக்கொண்டு இருக்கிறாள்..!! அவளை பார்க்கவே.., இறந்தவர்கள் உலகத்திலிருந்து வந்து இருக்கிறேன்..!!

ஒருமணி நேரம் ஆகிற்று..!! அழுது அழுது சுமியின் கண்களும்., முகமும் சோர்ந்து இருந்தன..!!! அவளை ஆற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தவித்தேன்.. பெஞ்சை விட்டு எழுந்தாள்..!!

"வரேன் டா வசந்த்.."

அந்த பெஞ்சைப் பார்த்து சொல்லிவிட்டு பூங்காவின் வாசலை நோக்கி நடந்தாள்.. எவ்ளோ அன்பு வைத்து இருக்கிறாள் என் மீது.. அடுத்த பிறப்பிலாவது உன்னுடன் சேர வேண்டும் சுமி என்று  வேண்டிக்கொண்டு நானும் அவள் போகும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தேன் அவள் மறையும் வரை..!!!

சுமியின் நினைவில் அங்கேயே ரொம்ப நேரம் நின்று கொண்டு இருந்தேன்.. மணியைப் பார்த்தேன்.. 1.15 என காட்டியது.. ஐயையோ.., அந்த பிரபு ஸ்டோர் வேற 2 மணிக்கு மூடிடுவானே..!!! அவன் கடைல தான் பூட்டு நல்லா இருக்கும்..!!! இந்த மேல் உலக டிராபிக்ல எப்புடி 2 மணிக்குள்ள போறது..??? ன்னு யோசித்துக் கொண்டே பறந்தேன்..!!!


-பிரபு நிழல்-


10 comments:

  1. romba svarasiyam..... romba romba superrrrr :)

    ReplyDelete
  2. பூங்கா முழுவதும் காதலர்களால் நிரம்பப்பட்டிருந்தது..!!! அனைவரும் இந்த உலகத்தை மறந்து வேறு உலகிற்குள் டிராவல் ஆகிக் கொண்டிருந்தனர்..!! நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்..!!
    nice lines da super !!!!
    super incredible awesome astonishing etc...

    ReplyDelete
  3. அருமையான படைப்புகள்

    ReplyDelete
  4. அருமையான படைப்பு .. ஒவ்வொரு காட்சியையும் வர்ணித்த விதம் அனைத்தும் கண் முன்னே நடப்பது போல காட்டியது :) :) வாழ்த்துக்கள் :)

    ReplyDelete