ஆந்திர/தெலுங்கானா பயணத்தின் இரண்டாவது நாள். முதல் நாள் கொடுத்த நீங்கா நினைவுகளுடன் இரண்டாவது நாளை துவக்கினோம்.
முதல் நாள் அனுபவங்கள் பற்றி படிக்க : https://prabhunizhal.blogspot.com/2022/08/1.html
காலை 4 மணிக்கு எழுந்து, முதல் ஆளாக நல்லமலா காடுகளுக்கு செல்லும் சோதனைச்சாவடியை கடக்குமாறு முந்தின நாளே நண்பன் நரேஷ் கூறி இருந்தான். அப்போது தான், நல்லமலா காடுகளில் இருக்கும் விலங்குகளை பார்க்க முடியுமென்றும், நேரம் ஆக ஆக, வண்டிகளின் சத்தத்தால் விலங்குகள் ஓடி ஒளிந்து விடுமென்றும் சொல்லி இருந்தான்.
ஆனால், நாங்கள் எழுந்ததோ ஆறு மணிக்கு. ஏழு மணிக்கு ஹோட்டலிருந்து வெளியேறி, மர்க்கபூரிலிருந்து தொரனலா நோக்கி செல்லும் சாலையைப் பிடித்தோம். தொரனலாவில் தான் நல்லமலா காடுகள் செல்லும் மலைப்பாதையின் முதல் சோதனைச்சாவடி உள்ளது.
Seven Hills Hotel, Markapur Location : https://www.google.com/travel/hotels/s/NsRPQEoMfbAL6Cag9
சாலையின் இருபுறமும் செம்மண் நிலங்கள். நடுநடுவே சிறுசிறு கிராமங்கள் என்று சாலை சென்று கொண்டு இருந்தது.
முதல் நாளிலிருந்து, நாங்கள் மூவரும் பார்த்து வியந்த விசயம், தமிழ்நாட்டில் எல்லா ஊரிலும் அண்ணாவின் சிலை இருக்கும், கூடவே கொஞ்ச தூரத்தொலைவில் எம்.ஜி.ஆர், அம்பேத்கர் சிலைகளும் இருக்கும். இப்பொழுது கலைஞர், ஜெயலலிதா சிலைகளும் வர ஆரம்பித்து விட்டன. ஆனால், ஆந்திர/தெலுங்கானா மாநிலங்களில் கிராமங்கள்/நகரங்கள் எங்கும் பெரும்பாலும் ஒரே ஒருவருடைய சிலை, அதும் மக்களை பார்த்து கை அசைக்கிற ஒரேவிதத் தோற்றத்தில் செய்யப்பட்ட ஆள் உயர சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதைப்பற்றி பேசிக்கொண்டும், ஆராய்ந்தும் கொண்டும் செல்லும்போது தான், அருண் அந்த சிலைகள் ஆந்திர அரசியல் தலைவர் YSR-யின் சிலைகள் என்று சொன்னான். காங்கிரஸ் ஆந்திராவில் எதிர்கட்சியாக இருந்த போது, காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான YSR மாநிலம் முழுவதும் நடைப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து, மக்களிடமிருந்தே குறைகளைப் பெற்று தேர்தல் வாக்குறுதிகளாக மாற்றி பெரும் வெற்றிக்கண்டு முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார். 2009 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருக்கும்பொழுது, இப்பொழுது நாங்கள் போய்கொண்டு இருக்கும் நல்லமலா காடுகளில் அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இறந்து போனார். சாலைகளில் உள்ள சிலைகள் அனைத்தும் அவர் நடைப்பயணம் செல்லும் போது, மக்களைப் பார்த்து கையசைத்த தோரணையைக் கொண்டு உருவாக்கப்பட்டன. ஆந்திர/தெலுங்கானா வளமையோடு, எங்களோடு இந்தப் பயணம் முழுவதும் பயணம் செய்தவர் YSR-ம் தான். வரலாற்றை படிக்க ஆர்வம் இல்லாதவர்கள் Amazon Prime-ல் , மம்முட்டி YSR-ஆக நடித்த YSR Yatra படத்தை பார்க்கவும். தமிழிலும் இருக்கிறது. பயணத்தை முடித்து நான் செய்த முதல் வேலை படத்தைப் பார்த்ததே.
YSR Yatra on Prime : https://www.primevideo.com/detail/0IV93I9TOXVB3699QEOYFC1DX9/ref=atv_dp_share_cu_r
7:30 மணிக்கு தொரனலா சோதனைச்சாவடியை 50 ரூபாய் கொடுத்து கடக்கும்பொழுதே சூரியன் பல்லைக்காட்டி கொண்டு தென்பட ஆரம்பித்துவிட்டார். சரி, விலங்குகள் எதுவும் தென்படாது, வா, ஶ்ரீசைலமாச்சும் போவோம் என்று மலை ஏற ஆரம்பித்தோம். சிறு மலை அளவுக்கே இருந்தது. நடுநடுவில் மலைக்கிராமங்களும், குரங்களும், எருமையுமே தென்பட்டன. ஆந்திர/தெலுங்கானா கிராமங்களில் இன்னொரு விசயத்தையும் கவனித்தோம். பெரும்பாலும் எருமை மாடுகளே இருந்தன. காளை மாடுகள் வயல்வெளிகளில் உழுது கொண்டு இருந்தன. மலை ரோடுகளில் சென்றுகொண்டு இருக்கோம் என்ற சொன்னால்தான் தெரியும் என்ற அளவுக்கு, பெரிய வளைவு, நெளிவு, பயமுறுத்தும் கொண்டை ஊசி வளைவு ன்னு ஏதும் இல்லாமல் தேமே என்று சென்று கொண்டு இருந்தது.
Dornala Location : https://goo.gl/maps/FidWMKgDWMXVnUw76
தொரனலாவிலிருந்து கிமீ தூரத்தில் ஶ்ரீசைலம் இருந்தது. ஶ்ரீசைலமும் ஒரு சிவன் கோவிலை மையமாக கொண்டு வணிகமயமாக்கப்பட்ட ஒரு சிறுநகரம். நகரின் ஆரம்பத்துலேயே ஶ்ரீசைலம் தேவஸ்தானம் உங்களை வரவேற்கிறது என்று ஒரு பெரிய நந்தியுடன் வரவேற்பு வளைவு வைக்கப்பட்டு இருந்தது. வளைவில் இருந்து பார்த்தால், ஶ்ரீசைலம் நகரத்தின் அழகும், ஶ்ரீசைலம் அணையும் அழகாக தெரியும்.
8 மணிக்கு ஶ்ரீசைலத்தை அடைந்து பொழுது கூட்டம் சேர ஆரம்பித்து இருந்தது. மாலை ஆறு மணிக்கு மேல், கீழே இறங்க அனுமதி இல்லாததால், இரவு தங்குவதற்க்கு நிறைய நிறைய தங்குமிடங்கள் உள்ளன. முந்தைய நாள் மாலை ஶ்ரீசைலம் வந்தவர்களும் சிவனைப் பார்த்து விட்டு கிளம்பும் வேகத்தில் இருந்தனர். காலஸஸ்தி போலவே இங்கும் செல்போனகளுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை. 10 ரூபாய் கொடுத்து பாதுகாப்பு அறைக்குள் வைக்க வேண்டும். வணிகமயமாக்கப்பட்ட நகரினுள் இருந்த கோவில் என்பதால், பலதரப்பட்ட வரிசைகள் இருந்தன. இலவச வரிசை, வேகமான வரிசை, மிகவும் வேகமான வரிசை, மிக மிக வேகமான வரிசை என்று பல வரிசைகள். வேகமான வரிசையில் போகலாம் என்று ஆளுக்கு 200 ரூபாய் கொடுத்து சென்றோம். வரிசையிலேயே ஒரு 1/2 கிமீ சுத்தி வரச்செய்து சிவன், பார்வதியைப் பாரத்தோம். பூஜை, சிறப்பு பூஜை, மிகச்சிறப்பு பூஜை என்று தனியே ஒரு கூட்டம். வேகமாக கோவிலுக்குள் சென்று, வெளியேறிய வெகு சிலருள் நாங்களும் இருப்போம். நான்கு கோபுரங்களும் அன்மையில் கட்டப்பட்டது போன்று அழகாகவும், மூல கோபுரம் தங்க தகட்டிலும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பின்ன, இவ்வளவு வரிசையும், வரிசைக்கேற்ற பணமும் இருந்தால், கோவிலையே தங்கத்தகட்டில் வடிவமைக்கலாம்.
வெளியே வந்ததும், கையளவு புளியோதரை அன்னதானத்தை வாங்கி கொண்டு, லட்டு வாங்கும் வளாகம் தென்பட்டதும், அங்கே போனோம். டெம்போலாம் வச்சு கடத்தி இருக்கோம், ரெண்டாயிரம் ரூபாயாச்சும் கொடுங்க டா ன்னு செந்தில், கவுண்டமணிகிட்ட கேக்குற மாதிரி, 200 ரூபாய் டிக்கெட் லாம் வாங்கி இருக்கோம், ஒரு லட்டாச்சும் இலவசமா கொடுங்க டா ன்னு கேட்டும், 1000 ரூபாய் டிக்கெட்டுக்கே நாங்க லட்டுத்தர மாட்டோம், நீ யார் டா கோமாளி மாதிரி சொல்லாமல் பார்க்க, பின்ன 20 ரூபாய் ஒரு லட்டு ன்னு பத்து வாங்கி போட்டு வந்தோம்.
Srisailam Temple Location : https://goo.gl/maps/g4Jrt46tMx6mEsW4A
காலணி, மொபைல் ன்னு வாங்கிட்டு வெளிய வரும்போது செமையா பசிக்க, ரோட்டோரம் இருந்த கடைலேயே சாப்பிடுவோம் ன்னு சாப்பிட்டோம். காலைச்சாப்பாட்டுக்கே பேல்பூரி வச்சு வியாபாரம் பாக்கிறத இப்பதான் பார்க்கிறேன்.
சாப்பிட்டு அடுத்த எங்க டா போலாம் ன்னு யோசிச்சுகிட்டு இருக்கும்போது, சங்கர் பக்கத்துல தான் ரோப்கார் இருக்கு, பாத்துட்டு போய்ரலாம் ன்னு சொல்லவும் அதுக்கு போனோம். கோவிலிருந்து ஒரு 500மீ தூரத்திலேயே ரோப்காரும், படகு சவாரியும் இருந்துச்சு. இந்த ரோப்கார், படகு சவாரிலாம், ஒரு பெரிய ஹோட்டலின் கீழ இருந்ததால், கார் நிறுத்த, எடுக்க ன்னு ஒரு பெரிய கூட்டம் எப்போதும் இருந்துகிட்டே இருந்தது. நாங்கள் ரோப்கார்க்கு மட்டும் 60 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு உள்ள போகும்போதே 30 நிமிடம் காத்திருப்பு நேரம் ன்னு போட்டு இருந்தது. காத்திருந்து ரோப்காரில் போனோம். ஶ்ரீசைலம் மேடான பகுதி என்பதால், அங்கு இருந்து கீழே இருக்கும் ஶ்ரீசைலம் அணைக்கு ரோப்கார் சவாரி அமைத்து இருக்கின்றனர். ரோப்கார் இல்லாமலும், சிறிது தூரத்தில் படி கீழ்நோக்கி செல்கிறது. என்ன ஒரு 500 படி மட்டும் தான். படிக்கட்டில் இறங்கி வரும் வழிகளில், பாதாளகங்கை அம்மனுக்கு என்று சொல்லி பலவித பூஜைகள் நடந்துகொண்டு இருந்தன.
கீழே போனதும் தான், படகு சவாரிக்கும் சேரத்து டிக்கெட் எடுத்து இருக்கலாம் என்று தோன்றியது. ஏன் என்றால், கீழே அது மட்டும் தான் ஒரே பொழுதுபோக்கு நிகழ்வு. கீழேயும் ஒரு டிக்கெட் எடுக்குமிடம் இருக்கு ன்னு கேள்விபட்டதும், ஆளுக்கு 60 ரூபாய் டிக்கெட் எடுத்துகிட்டு உடனே கிளம்பிட்டோம். ஒரு 50 பேர் அமர்வதற்கான படகில்(படகா? கப்பலா? எதோ ஒன்னு) கடைசி வரிசையில் அமர்ந்துவிட்டோம்.
படகில் ஒரு அரை மணி நேரம் அணையின் மதகு பகுதிக்கு எதிர்பகுதியில் சவாரி செய்தோம். படகு ஓட்டுனர் சொல்லும்போது தான் தெரிந்தது, ஒரு நாளுக்கான சுற்றிப்பார்ப்பதற்க்கு இடங்கள் உள்ளன என்று. காலை 6 மணிக்கே குகைகளை பார்க்க செல்லும் 4 மணி நேர படகு சவாரியும் இருக்கிறது போல. படி வழியே கீழே இறங்கி வரும் வழியில், வேகமான படகு, பரிசல் படகுகள் என பல சவாரிகள் உள்ளன.
மறுபடியும் ரோப்கார் வழியே மேலே வந்து, ஶ்ரீசைலம் அணையின் மதகு பகுதிக்கு சென்று தண்ணீர் வெளியேறும் அழகைப் பார்க்கலாம் என்று கேட்டால், அது ஹைதராபாத் போகும் வழிலேயே வரும் என்று சொல்ல, அடுத்த பயணம் ஹைதராபாத்தை நோக்கி. ஶ்ரீசைலமிலிருந்து வெளியே வந்ததும், உடனேயே இடது பக்கத்தில் ஹைதராபாத்துக்கு மலைகளினூடே வழிச்செல்கிறது.
ஶ்ரீசைலம் ஒட்டிய சிறு கிராமங்கள் ஊடே சென்ற வழியானது, கடைசியாக நாங்கள் மிகவும் எதிர்பார்த்த அணையின் முழு வடிவத்தையும் காட்டிடும் பகுதிக்கு வந்தோம். அழகு என்றால் அழகு, கொள்ளை அழகு. 12 மதகுகள் கொண்ட அணை, 10 மதகுகள் வழியே 4 லட்சத்திற்க்கும் அதிகமான கனஅடி தண்ணீரை வெளியேற்றியது. மேட்டூரில் வெளியேற்றிய அதிகபட்ச தண்ணீரின் அளவே 2 லட்சத்து சொச்சம் தான். அதுவே கடல் போல காட்சியளித்தது என்றால், நினைத்துக்கொள்ளுங்கள் இது எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்று. மலையிலிருந்து அணையின் ஊடாக சென்று, அணையிலிருந்து வரும் தண்ணீரை பாலம் வழியாக கடந்து, அணையின் அந்த பகுதியின் ஊடாக சென்று, அடுத்த மலையை ஏற வேண்டும். அணையிலிருந்து கீழே சென்ற தண்ணீர் பட்ட வேகத்தில் 100 அடிக்கும் மேலே வந்து அந்த சாலைகளில் சென்ற அனைத்து வாகனங்களையும் மழைப்போல் நனைத்தது. முடிந்த அளவுக்கு எங்களால் எங்கெல்லாம் நிறுத்த முடியுமோ, அங்கெல்லாம் நிறுத்தி போட்டோ எடுத்தோம்.
இந்த ஆக்ரோச தண்ணீரிலும் உள்ளூர் மக்கள், மீன் பிடித்துக்கொண்டும், அதை சமைத்தும், விற்றும் கொண்டு இருந்தனர். அணையின் அடுத்த பகுதிக்கு சென்று, அங்கும் சிலபல போட்டோக்கள் எடுத்துவிட்டு, அடுத்த மலைக்கு ஏறத்தொடங்கினோம். நடுவே இரண்டு வனத்துறை சோதனைச்சாவடி வேறு. இரண்டிலும் தலா 50 ரூபாய் வாங்கிக்கொண்டார்கள்.
இந்த நல்லமலா காடுகளில் 2018-ஆம் ஆண்டு கணக்கெடுக்கின்படி 68 புலிகள் உள்ளனவாம்.
நடுநடுவே வியூபாய்ண்ட் என நிறைய இடங்கள் வந்தன. நாங்கள் ஏற்கனவே நிறைய வியூகளைப்பார்த்து விட்டால், அதையெல்லாம் பார்க்காமல் ஹைதராபாத்தை நோக்கி ஓட்டினோம். மேலே வரும் வாகனங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில், ஶ்ரீசைலம் போகும் கார்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகமாக இருந்தது. ஹைதராபாத்தை நோக்கி சென்ற வெகுசில கார்களுள் எங்களுடைய காரும் ஒன்று. முன்னரே சொன்ன மாதிரி வளைவு நெளிவு பெரிதாக இல்லாவிட்டாலும், காடுகளின் ஊடே சாலைகள் சீராக சென்று கொண்டு இருந்தது.
இந்த நல்லமலா காடுகளிருந்து, ஹைதராபாத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 765-ல் பயணம் செய்து கொண்டு இருந்தோம். ஸ்ரீசைலமை நோக்கி செல்லும் எதிர் சாலையில் மட்டுமே போக்குவரத்துக்கு இருந்தது. நடுநடுவே இந்த வேகத்தடைகளும் வந்து இம்சை பண்ணியது. சாலையின் இருபுறமும் பச்சை பசேலென இருக்கும் நிலங்களை பார்த்துக்கொன்டே, சிறுசிறு கிராமங்களையும், நகரங்களையும் தாண்டி 765 சென்று கொண்டு இருந்தது.
தண்டி என்ற ஊர் வந்ததும், சாப்பாடுக்கு இடம் தேடிக்கொண்டு இருந்த போது, பெரிய நீர்த்தேக்கத்தையும், அதை பார்க்க மக்கள் பெரும் கூட்டமாய் கூடி இருந்ததை பார்த்ததும் வண்டியை ஓரம் கட்டினோம். அதன் பெயரும் தண்டி நீர்த்தேக்கம் தான். நீர்த்தேக்கம் பெரிய கடல் போல இருந்தது. தண்ணீர் வந்து கொன்டே இருந்ததால், நீர் வழிந்து ஓடியது, பார்க்கவே அற்புதமாக இருந்தது. நீர்த்தேக்கத்தை மேலே ஏறி பார்ப்பதற்கும் படிக்கட்டுகள் இருந்தது. கொஞ்ச நேரம், நீர்த்தேக்கத்தில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.
Dindi Reservoir Location : https://goo.gl/maps/Q6JxTaQdqtuMvhAJ7
அடுத்து சாப்பிட கடையைத் தேடிக்கொன்டே வந்ததில், VHR பேமிலி உணவகத்தை பார்த்தோம். பிரியாணி, சாப்பாடு இருக்கும்ன்னு தான், தாபா மாதிரியான உணவகத்தை விட்டுவிட்டு பேமிலி உணவகத்திற்கு வந்தோம். கடைசியில் இந்த உணவகத்திலும், தாபா மாதிரியான உணவுகளே இருந்தது. இல்லை இல்லை அந்த சர்வர் பிரியாணி, சாப்பாடு வெச்சுக்கிட்டே இல்லைன்னு சொல்லி, நான், ரொட்டி, கறி ன்னு தலைல கட்டிட்டான். நான், ரொட்டி ன்னு வாங்குனாதானே எக்ஸ்ட்ராவா ஏதாச்சும் வாங்குவான் ன்னு சொல்லி மத்த ஏதும் இல்லை ன்னு சொல்லிட்டான். தெலுகுவோடு, எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்து இருந்தது. நாங்க தமிழ், தெலுகு, கன்னடா, ஹிந்தி ன்னு எங்களுக்கு தெரிந்த எல்லா வார்த்தைகளையும் ஒரு கலைவையா போட்டு சர்வரோடு பேசிக்கொண்டு இருந்தோம்.
VHR Family Restaurant Location : https://goo.gl/maps/c4RcbCaXntd4fMA66
சாப்பிட்டுவிட்டு, ஹைதராபாத்தை நோக்கி மறுபடியும் பயணத்தை தொடர்ந்தோம். ஹைதராபாத்துக்கு 50 கி.மீ இருக்கும் போதே, ஹைதராபாத்திற்கான ட்ராபிக்கை உணர்ந்தோம். ஹைதராபாத்தை தொட்டதும், ஜவர்ஹலால் நேரு அவுட்டர் ரிங் சாலையை அடைந்தோம். 8 வழிச்சாலை. முடிந்த அளவுக்கு வேகமாய் சென்றோம். நாங்கள் புக் செய்து இருந்த ஹோட்டல், பஞ்சாரா ஹில்ஸிலிருந்து, பேகும்பேட்டில் இருந்தது. ஹைதராபாத்தில் ட்ராபிக்கை சமாளித்துகொன்டே பேகும்பேட்டை அடைந்தோம். ஹோட்டலை அடைந்ததும் தான் தெரிந்தது, நாங்கள் ஹைதராபாத் வரும் வழியில் புக் செய்தது, அவங்களுக்கு வரவே இல்லை என்று. அப்புறம் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு, வேற ஹோட்டல் மாற்றி வாங்கி, அதே பேகும்பேட்டில் உள்ள இன்னொரு Oyo ஹோட்டலிருக்கு சென்றோம்.
ஹோட்டலிருந்து அடுத்த என்ன செய்யலாம் ன்னு யோசித்து கொண்டு இருக்கும் போதே, பக்கத்தில் ஹுசைன் சாகர் ஏரி, சாப்பிடும் இடங்கள் ன்னு கொஞ்சம் சுத்தி பாத்திட்டு வருவோம் ன்னு கிளம்பினோம். ஹுசைன் சாகர் ஏரிக்கு செல்லும் போது, ஏரியே விழாக்கோலம் கண்டு இருந்தது. நேரத்தைப்போக்குவதற்கு அவ்வளவு நிகழ்வுகள் அந்த ஏரியை சுற்றி நடந்துக்கொண்டு இருந்தது. படகு சவாரிக்கு செல்லலாம் னுக்கு சொல்லி, ஏரிக்கு போக உள்நுழைவு டிக்கெட் வாங்கி கொண்டு, படகு சவாரிக்கு போனால், அவ்வளவு கூட்டம். ஒரே நேரத்தில் ஒரு 1000 பேர் விதவித படகுகளில் சவாரி செய்துக்கொண்டு இருந்தனர். நாங்களும் கூட்டம் குறைவாய் இருந்த, வேகப்படகு சவாரிக்கு 3 பேருக்கு 350 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துவிட்டு எங்கள் முறை வரும்வரை வரிசையில் காத்து இருந்தோம். அந்த இரவிலும், அவ்வளவு ஆர்வம் மக்களிடையே படகு சவாரிக்கு.
எங்கள் முறை வந்ததும், படகில் ஏறினோம். ஒரு 5 நிமிட பயணம் தான். வேகமாய் போய், அந்த புத்தர் சிலையை சுற்றி வரும். அவ்வளவு தான். இருந்தாலும் அது ஒரு அனுபவம் தான். இரவில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக, வண்ண ஒளியில் மின்னிய புத்தர் சிலையும், ஹைதராபாத்தையும் பார்பதற்க்கே அவ்வளவு அழகாக இருந்தது. அதுவும் தண்ணீரில் இருந்து பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருந்தது.
Hussai Sagar Lake Boating Point, Hyderabad Location : https://goo.gl/maps/SbG8ShcWD6XYN1of9
ஏரியின் சுற்றி நடந்துகொண்டு இருந்த, வேறு நிகழ்வுகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அடுத்து சாப்பிடும் இடத்திற்கு நகர்ந்தோம். ஹைதராபாத்தில் பக்லவா சாப்பிட வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. அதற்காக ஹைதராபாத்தில் ரொம்ப பாப்புலரான, Gourmet பக்லவா கடைக்கு சென்றோம்.
துருக்கியில் உருவானதாக சொல்லப்படும் பக்லவா ஒரு இனிப்பு வகை. ஹைதராபாத், சென்னை போன்ற பெரு நகரங்களில், இதை செய்து விற்பதற்காக சில நல்ல கடைகள் உள்ளன. அதில் ஒன்னு தான் இந்த Gourmet பக்லவா. முடிஞ்ச அளவுக்கு சாப்பிட்டு, தேவையான அளவுக்கு அவரவர் வீடுகளுக்கு வாங்கி கொண்டோம். இந்த பக்லவா கடைகள், ஆன்லைனில் ஆர்டர் செய்தால், இந்தியா முழுவதும் அனுப்பியும் வைக்கின்றன. சாப்பிட்டு தான் பாருங்களேன்.
Gourmet Baklava Location : https://goo.gl/maps/R3iMvFZVgkCZf4zt5
பக்லவாவை சாப்பிட்ட பிறகு, அடுத்த போன இடம் தான் சார்மினார். மணி 9 ஆகி விட்டது. இதற்கு அப்புறமும் சார்மினார் போக வேண்டுமா, என்ன இருக்கிறது என்று அருணும், சங்கரும் கேட்டுக்கொன்டே வந்தனர். சார்மினார் போவது, சார்மினார்க்கு அருகில் இருக்கும் நிம்ரா சிற்றுண்டி கடையில் டீ குடிப்பதற்கும், அங்கே செய்யப்படும் 25க்கும் அதிகமான பிஸ்கட் வகைகளை சாப்பிடுவதற்கு மட்டுமே. ஹைதராபாத்தில் இருக்கும் மிக பாப்புலரான ஒரு கடை.
நாங்கள் சார்மினாரை நெருங்கும் போதே, மணி 10ஐ காட்டியது. எங்கள் பயணத்தின் மிக மோசமான ஒரு மணி நேரம் பயணத்தை சார்மினாரை நோக்கி செல்லும் சாலைகளில் செலவிட்டு இருப்போம். அவ்வளவு நெருக்கடி. புள்ளிங்கோ என்னங்க வண்டி ஓட்டுறது, அங்க வந்து பாருங்க, அவன் அவன் வண்டி ஓட்டுறத. எப்போ உள்ள வருவான், எப்போ வந்து இடிப்பான் ன்னு தெரியாத அளவுக்கு ஓட்டிட்டு இருந்தாங்க. பொண்ணுங்க, பசங்க, ஆட்டோ டிரைவர் ன்னு எல்லோரும் இப்படி தான் ஓட்டிட்டு இருந்தாங்க. எப்படியோ சமாளிச்சு ஓட்டிட்டு போய் நிம்ரா கடையில் டீ குடிக்கும் போது மணி 10:30. சில பிஸ்கட் வகைகளை சாப்பிட்டுவிட்டு, டீ குடித்து விட்டு, ஒரு ஒஸ்மானியா பிஸ்கட் டப்பாவை பார்சல் வாங்கிக்கொண்டு ரூம் க்கு வந்தோம்.
Nimrah Cafe Location : https://goo.gl/maps/NKU9MczkESdhjDjm6
பெரிய பயணம், நெறைய நினைவுகள், அனுபவங்கள் ன்னு இன்றைய நாள் இனிதே முடிந்தது.
இரண்டாம் நாளின் பயணத்தொலைவு : 330km
இரண்டாம் நாளில் நாங்க பயணம் செய்த வழியின் கூகிள் map:
































