Showing posts with label எஸ்.ரா. Show all posts
Showing posts with label எஸ்.ரா. Show all posts

Saturday, March 20, 2021

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - புத்தக விமர்சனம்

 என்னடா இவன், வாரம் ஒரு புத்தக விமர்சனம் போடுறானே, இவ்வளவு வெட்டியா இருக்கானா, வேலைக்கு ஏதாச்சும் போறான்னா? புத்தகம் படிச்சிட்டு தானே போடுறான் இல்ல சும்மா மேலோட்டமா படிச்சிட்டு போடுறானா ன்னு கேள்வி கணைகள் நாலா பக்கமும் இருந்து வருகிறதை எனக்கும் தெரிகிறது. 2021 வருடத்தில் ஒரு மாதத்திற்கு 3 புத்தங்கங்கள் கண்டிப்பாக படிச்சியாக வேண்டும் என்ற குறிக்கோள் வைத்து இருந்தேன்(ஒண்ணுமில்ல, போன சில வருடங்களில் வாங்கி படிக்காம வைத்து இருக்கிறதே 30 புத்தகங்களை தாண்டுகிறது, அதான்). இந்த மாதம் கொஞ்சம் அதிகமாகிருச்சு, மன்னிச்சு. வாங்க விமர்சனத்திற்கு போகலாம்.

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை





















ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: தேசாந்திரி பதிப்பகம்
விலை: 200 ரூபாய்
பக்கங்கள்: 221


புத்தகம் அறிமுகமானது எப்படி: 

எஸ்.ராவின் எழுத்துக்களுக்கு நான் ஒரு மிகப்பெரிய விசிறி. எந்தவொரு பயண திட்டங்களும் இல்லாமல், எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல், வழியில் சந்திக்கும் மனிதர்களின் கூடவே பயணித்து, அவர்களுடன் தங்கி, அவர்தம் வாழ்க்கை சூழ்நிலையை பதிவு செய்யும் அவரின் பயணக்குறிப்புகள் படிக்கவும் சரி, அனுபவிக்கவும் சரி அவ்வளவு அற்புதமாக இருக்கும். பயண கதைகளை அவர் பதிவு செய்யும் போது, உங்களையும் கூடவே அவருடன் கூப்பிட்டு செல்வார். நானும் ஒவ்வொரு முறை பயணம் திட்டமிடும் போது, எஸ்.ராவை போலவே திட்டமில்லாத பயணங்கள் செய்ய வேண்டும், புது அனுபவங்கள் பெற வேண்டும் என்று நினைப்பேன். நம்முடைய அவசர வாழ்க்கையில், அவரை போல் நிதானமாக பயணித்து பதிவு செய்யும் பயணங்கள் எப்போதும் ஒரு கனவே. அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர் ஒரு காதல் கதை எழுதியுள்ளார் என தெரிந்ததுமே, அந்த புத்தகத்தை எடுத்து விட்டேன். காதல் ன்னா, விண்ணை மட்டுமென்ன, இந்த பால்வழி மண்டலத்தையே தாண்டி வரலாம். 

விமர்சனம்:

இந்த காதல் கதையும் ஒரு பயணத்தில் ஆரம்பிக்கிறது. கதையின் நாயகன் குளிரான பனிக்காலத்தில், கர்நாடக மாநிலம் சித்தாபுரா என்ற ஒரு ஊருக்கு பேருந்தில் செல்வதாக ஆரம்பிக்கிறது. கதைக்களமானது சித்தாபுராவிற்கும், கோவில்பட்டி கரிசல் காட்டிற்கும் மாறி மாறி பயணிக்கிறது. சுப்ரமணியன், இல்லை இல்லை, சுப்பி, அப்படி தான் நாயகி சில்வியா கூப்பிடுவாள். 

கோடைவிடுமுறை நியாபகம் இருக்கிறதா, அந்த கோடைவிடுமுறையில் போகும் விடுமுறை பயணங்கள் நியாபகம் இருக்கிறதா. அப்படியான ஒரு கோடைவிடுமுறையில், கிராமத்து ஆண்-பெண் இருபாலர் அரசு பள்ளியில் படித்து இருந்தாலும், பெண் பிள்ளைகளிடம் பேசாத, பழகிராத சுப்பி, மறுபுறம் நகர பெண்பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் படித்த நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும், அசாத்திய குறும்புக்காரி சில்வியா. 

சுப்பி, சில்வியாவை சந்தித்தது, பழகியது, அவளால் பல இடத்தில மாட்டியது என முதல் விடுமுறையில் போதுமென்ற அளவுக்கு பழகிய அவர்கள், பின்வரும் விடுமுறையில் சந்தித்தார்களா, விடுமுறையில் வந்த பிரச்சனைகள் என்ன, இப்பொது யாரை பார்க்க சுப்பி போய் கொண்டு இருக்கிறான் என்பதே மீதி கதை. 

நண்பர்கள் காதலர்கள் ஆனால், அந்த காதலர்களுக்கு இடையில் காலத்தினால் பிரிவு ஏற்பட்டு வேறு வேறு திசையில் பயணித்தால், அவர்கள் வேறு ஒருவரை கல்யாணமும் செய்து கொண்டால், அப்படியாக கல்யாணம் செய்த பிறகு நடந்த வாழ்க்கை சுழலுக்கு அப்புறம் மீண்டும் சந்தித்தால், மறுபடியும் நண்பர்களாய் தொடர்ந்தால். அவ்ளோதாங்க கதை. இதை மாஸ்டர் எப்படி சொல்லி இருக்கார் என்பதே முக்கியம்

எஸ்.ராவை விட்டுவிட்டால் பூமி, பாறை, பாறைக்குள் இருக்கும் கல் , கல்லுக்குள் இருக்கும் மண், மண்ணுக்குள் இருக்கும் மண்புழு, மண்புழுவுக்குள் இருக்கும் உயிர், உயிருக்குள் இருக்கும் உணர்வு ன்னு வருணித்து கொன்டே இருப்பார். சில சமயம் அவருடைய வருணனைகள் அவ்வளவு அழகா இருக்கும். இந்த புத்தகத்திலேயே அவர் கரிசல் காட்டு வெயிலை அவ்வளவு அழகாக வருணித்து இருப்பார். இன்னொருபுறம் வருணித்து வருணித்து படிக்கும் நம்மளையே அயர்ச்சி அடைய செய்து இருப்பார். சினிமாவிற்கு போகும் சில சமயங்களில், நேரம் தவறி முதல் 15 நிமிடங்களை தவற விட்டு இருப்போம். ஆனால் படம் முடியும்போது தவறவிட்ட முதல் 15 நிமிடங்கள் பெரிதாய் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்காது. அதே மாதிரி தான் இந்த புத்தகமும், முதல் 25 பக்கங்களை தாண்டி நீங்கள் கதைக்குள் நுழையலாம். பெரியதாய் ஒன்றும் தவற விட்டு இருக்க மாட்டிர்கள்.

பதின்பருவ காதலில் நீங்கள் வீழ்ந்து இருந்து இருந்தால், அந்த காதலை, முதல் காதலை தவற விட்டு இருந்தால்(நெறைய "தால்" போட்டுட்டேன் போலயே, பரவால்ல), அட குறைந்தபட்சம் காதலை நேசிக்கிறவராக இருந்தால் போதும், அந்த காதல் ஏற்படுத்தும் வேதியல் மாற்றங்களுக்கும், அதன் குறும்புகளுக்கும், அதன் அழகியலுக்கும் நீங்களும் அடிமை என்றால், இந்த புத்தகம் உங்களுக்குள் பல புன்முறுவல்களை கொண்டு வரும்.  

அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.

அன்புடன்

-பிரபு கந்தசாமி