Showing posts with label ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள். Show all posts
Showing posts with label ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள். Show all posts

Friday, March 19, 2021

ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள் - புத்தக விமர்சனம்

 தொடர்ந்து நாவல்களா படிச்சிட்டு வர்றோமே, கொஞ்சம் மாத்தி படிப்போம் ன்னு அரசியல் சைடு போலாம் ன்னு பார்த்தால், ஏற்கனவே அரசியல் களம் தேர்தலை எதிர்கொண்டு நெருப்பா எரியுது. ஊடங்களில் வரும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் புரிஞ்சிட்டு படிச்சு பதில் சொன்னாலே போதும். இப்போதைக்கு அதை தொட வேண்டாம் ன்னு மனசு சொன்னாலும், மூளை கேக்கல. சரி மனசுக்கும், மூளைக்கும் தோதுவான ஒரு புத்தகம் ன்னு இதை எடுத்தேன். இந்த புத்தகமும் சும்மா இல்லை. 1990-களில் தமிழக அரசியலை திருப்பி போட்ட படுகொலைக்கான காரணங்களை அதே பதற்றத்தோடு விவரிக்கும் ஒரு புத்தகம். இந்த படுகொலை ஏற்படுத்திய கரும்புள்ளிகள், ஆறாத காயங்கள் இன்னும் அரசியலிலும், தமிழகத்திலும் இருக்கு என்றே சொல்லலாம். சரி வாங்க, புத்தக விமர்சனத்திற்கு போவோம். 


ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள்





















ஆசிரியர்: நக்கீரன் புலனாய்வு குழு
பதிப்பகம்: நக்கீரன் பதிப்பகம்
விலை: 225 ரூபாய்
பக்கங்கள்: 192

புத்தகம் அறிமுகமானது எப்படி: 

அரசியல் பேசும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன் நான். அப்பா தீவிர திராவிட பற்றாளர். 15 வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்பொது பார்க்குற மாதிரி செய்தி சேனல்களும், இணைய வசதியும் கிடையாது. ஒரு பரபரப்பு செய்தியை, புலனாய்வு செய்தியை, திரைமறைவுக்கு பின்னால் நடக்கும் செய்திகளை தாங்கி வரும் நக்கீரன், ரிப்போர்ட்டர் புத்தகங்கள் வெகு பிரபலம். அப்பாவும் ஒவ்வொரு வாரமும் மறக்காமல் வாங்கி படிப்பார். அப்பாவினால் நானும். அப்படி ஆரம்பித்த நக்கீரனின் சகவாசம் இன்று தொடர்கிறது. திரைமறைவுக்கு பின்னால் நடக்கும் நிகழ்வுகளை நக்கீரனை போல் வெளிக்கொண்டு வந்தவர்கள் யாரும் இல்லை. ராஜிவ் படுகொலையாய் இருக்கட்டும், வீரப்பனை சந்தித்து அவன் சார்பான செய்திகளை கொண்டு வருவதாகட்டும், ஜெயலலிதா சம்மந்தமான கொடநாடு பங்களா, தருமபுரி பேருந்து எரிப்பு, சந்திரலேகா ஆசிட் வீச்சு செய்திகளாகட்டும், சமீபமாக வந்த பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு செய்திகளாகட்டும் நக்கீரனை மிஞ்ச ஆள் இல்லை இந்த தமிழ் பத்திரிகை உலகத்தில். அப்படியாகப்பட்ட ஒரு நக்கீரனிடம் இருந்து ஒரு புத்தகத்தை இந்த 2021 வருடம் புத்தக கண்காட்சியில் பார்த்தேன். அது தான் ராஜிவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள். ராஜிவ் படுகொலையின் செய்திகளை பல விடீயோக்கள், பதிவுகள், செய்திகள் வாயிலாக படித்து இருந்தாலும், நக்கீரன் வாயிலாக படிக்க ஒரு ஆர்வம். அதான் உடனே வாங்கிவிட்டேன்.

விமர்சனம்:

புத்தகம் அறிமுகத்தில் நக்கீரன் இதுவரை சிறப்பாக கையாண்ட புலனாய்வு செய்திகள் சிறு தொகுப்பாய் கொடுக்கப்பட்டு இருந்தது. அவை அத்தனையுமே தமிழகத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள், தமிழகத்தை ஆட்டி படைத்த நிகழ்வுகள். இன்று பொய்யை மட்டுமே கக்கிக்கொண்டு இருக்கும் ஊடகங்களுக்கு மத்தியில், உண்மையை வெளிக்கொண்டு வர நக்கீரன் எடுத்த முயற்சிகள் சிறப்பு. மாட்டிராத டா கைப்புள்ள ரேஞ்சுக்கு கஷ்டப்பட்டு செய்தி சேகரித்து இருப்பார்கள் போலிருக்கு. 

பக்கங்களும் மாறுகின்றன, காட்சிகளும் விரிகின்றது. 1991 ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி இரவை அப்படியே செய்திகள் வாயிலாக கண்முன்னே கொண்டு வருகின்றது நக்கீரன். ஒரு இளம் தலைவர், இப்பொது ராகுல் மாதிரியே, அப்போதைய ராஜீவ் காந்தி, துடிப்பும், ஆற்றலும் உள்ள ஒரு முன்னாள் பிரதமர். அவருடைய தமிழக வருகையில் கடைசி நிமிடங்களில் நடந்த குளறுபடிகள், அவர் இறந்த போது, தமிழக காங்கிரசு தலைவர்கள் ஒருவரும் அவர் கூட இல்லாமல் ஒருசேர தப்பித்தது, அதை ஒட்டிய கலவரங்கள், அரசியல் நிகழ்வுகள் அவர் படுகொலை வேற ஒருவரால் நடத்தப்பட்டு இருந்தாலும், அதை இயக்கியவர்கள் கூட இருந்தவர்களே என்ற பல்வேறு விதமான சந்தேகங்களை அரசியல் உலகில் கிளப்பி விட்டு இருந்தது. 

இன்றும் பொதுமக்களை நோக்கி, யாருங்கய்யா ராஜீவை கொலை செஞ்சாங்க ன்னு கேட்டால், எல்லோரும் ஒரு சேர, அதுவாங்க, அது இலங்கையில் ஒரு அமைப்பு இருந்துச்சே, தடை கூட பண்ணாங்களே தமிழ்நாட்டுல, ஆங், விடுதலை புலிகள் ன்னு தெளிவாக சொல்லுவார்கள். இது மக்களால் படிச்சு அறியப்பட்ட செய்தி அல்ல. மாறாக, படுகொலையை சார்ந்து ஊடகங்களும், அரசியல்வாதிகளும் தங்கள் வசதிக்கேற்றார் போல் அந்த பழியை விடுதலைப்புலிகள் மேல் போட்டுவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். 

நக்கீரன் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இந்த படுகொலையை அலசி இருக்கிறார்கள். படுகொலைக்கு பிறகு நடந்த விசாரணைகள், விடுதலைப்புலிகளின் தலையமகத்திலிருந்து வந்த மறுப்பு செய்தி, மேற்கு இந்தியா என்ற அமெரிக்க வார இதழ் அலுவலகத்திற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு, படுகொலையில் இறந்தாலும் உதவிய பாபுவின் கேமரா (இதே மாதிரி தான்  கே.வி. ஆனந்த் இயக்கிய கோ படத்தில் குண்டுவெடிப்பில் கேமரா கொண்டு துப்பு துலக்கி இருப்பாங்க. நாமளும் ஒரு புலனாய்வு புலி தான்) , படுகொலை நடந்த காலத்தில் இந்தியாவில் இருந்த புலிகளின் வெடிகுண்டு நிபுணர் இளையதம்பி கிருபாளன், சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி தொடர்பு, கூட இருந்த வாழப்பாடி, ஜெயந்தி நடராஜன், மூப்பனார் போன்றோரின் தகவல்கள், இலங்கை சென்று விசாரித்தது என ஒரு பெரிய வட்டத்தையே இந்த படுகொலையின் பொருட்டு இந்திய உளவுத்துறையும், சி.பி.ஐ யம் உருவாக்கி இருந்தது. அதை அத்தனையும் நக்கீரன் சேகரித்து கொடுத்துள்ளது. 

மேலோட்டமான விசாரணையில் பார்ப்பதற்கு, விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட படுகொலை மாதிரி தெரிந்தாலும், இது சர்வதேச சதிகளோடு நடைபெற்ற ஒரு மாபெரும் தாக்குதல் என்ற கோணத்தையும் நக்கீரன் வைக்கிறது. CIA அமெரிக்காவின் முக்கிய உளவு துறை அமைப்பு, அது என்றைக்கும் இந்தியாவில் ஒரு நிலையான அரசு அமைவதை விரும்பாது, அதும் இடதுசாரி உடனான கூட்டணி ஆட்சி எனில் அதை விரும்பவே விரும்பாது(ஜோதிபாசுவும், ராஜீவும் கூட்டணி), அதுனாலயே அவர்கள் ராஜீவை கொன்று இருப்பார்கள், அதற்கு அவர்கள் விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி கொண்டார்கள் என நக்கீரன் எடுத்து வைக்கும் வாதம் முக்கியமானது. 

சி.பி.ஐ யின் பல கேள்விகளுக்கு விடைகள் தெரிவதற்கு முன்பாகவே, சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தினால், ஏனோ தானோ என்று விசாரித்தது, தொடக்கம் முதல், இறுதி வரை விடுதலைப்புலிகளை தாண்டி சிந்திக்காதது, படுகொலையில் சம்மந்தப்பட்டவர்கள், விடுதலைப்புலியின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற ஒரு புள்ளியை வைத்துக்கொண்டு அதை சுற்றியே விசாரித்தது, கைது செய்தது, இதோடு தொடர்புடைய தமிழக அரசியல்வாதிகளை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வராதது எப்படி பல கேள்விகளை இந்த புத்தகம் உங்கள் கண்முன்னே வைக்கும். 

ஒருவேளை கொகுணகுண்டா துப்பாக்கி சூட்டில், சிவராசனும், சுபாவும்(முக்கிய கொலையாளிகள்/கூட்டாளிகள்) இறக்காமல் இருந்து இருந்தால், இந்நேரம் பல கேள்விகளுக்கு விடை தெரிந்து இருக்கும். பல அரசியல் சூழ்ச்சிகள் தெரிந்து இருக்கும். ஆனால் அரசியல்வாதிகள் அதை வெளிய வரவிடாமல் செய்து இருப்பார்கள் என்பது வேற விஷயம். எப்படி பேரறிவாளன், நளினி இந்த படுகொலை சார்ந்து விசாரணை வளையத்திற்குள் வந்தார்கள், எப்படி கைது செய்யப்பட்டார்கள் என்பதையும் நக்கீரன் விவரிக்கிறது.

நக்கீரன் கோபால் இந்த புத்தகத்தை முடிக்கும் முன் இப்படி குறிப்பிட்டு இருப்பார்,

ராஜீவ் படுகொலை... செய்தியாகவும் வரலாறாகவும் மட்டுமே அறியும் இந்தத் தலைமுறைக்குத் தெரிந்தது ஒரே ஒரு கோணம்தான்; ஒரு கோட்பாடுதான். அது அந்தப் படுகொலை, புலிகளால் நிகழ்த்தப்பட்டது என்ற அந்தக் கோட்பாடு. ஆனால், கூரை இல்லாத வீட்டில் வாசற்கதவை அடைந்துவிட்டேன், இனி திருடன் வரமாட்டான் என்று நம்புவதைப் போலத்தான் இந்த விசாரணையின் முடிவுகள் நம்பப்படுகின்றன. விடுதலைப்புலிகள் என்ற ஒரே கோட்டில் சென்று இலக்கை எட்டிவிட்டோம் என்று கூறிக்கொள்கிறார்கள். அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. சி.ஐ.ஏ... சந்திராசாமி... காங்கிரஸ்... அ.தி.மு.க. புள்ளிகள்... இன்னும் பல முடிச்சுகள். நக்கீரனின் இந்த விசாரணை வரலாற்றை வாசிப்பவர்களுக்கு மனதில் எழும் அத்தனைக் கேள்விகளும் இன்னும் உயிருடன் இருக்கின்றன.

இன்றும் இந்த படுகொலை பற்றி பேசும் போதுலாம் அரசியலில் ஒரு தீக்கனல் உருவாகுவதை காணலாம். இந்திய அரசியல் வரலாற்றில் நடந்த படுகொலைகளில் இது மிக முக்கியமானது. மற்ற கொலைகளில், காரணம், செய்தவர்கள் பற்றிய ஒரு மேலோட்ட தகவல்களாவது இருக்கும். ஆனால், இந்த படுகொலையில் வேண்டுமென்றே பல தகவல்கள் மறைக்கப்பட்டு, போலியாக செய்திகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கும் இந்த படுகொலை பற்றி தெரிய வேண்டுமானால், இது ஒரு முக்கியமான புத்தகம். படிக்க தவறாதீங்க. 

அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.

அன்புடன்

-பிரபு கந்தசாமி